×

பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!!

சென்னை: பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மூத்த தலைவர் எச்.ராஜா, தனது சமூக வலைத்தளமான ட்விட்டர் தலத்தில், கடந்த 2018ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை பதிவிட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் அளித்த புகாரின் பேரில், ஈரோடு டவுன் காவல்துறை, எச்.ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கக்கூடிய சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை 3 வாரத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் எச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், இந்த பதிவை பதிவிட்டது நீங்களா? என ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு, சர்ச்சைக்குரிய கருத்தை பதிவு செய்தது தாம் தான் என்று எச்.ராஜா தரப்பில் பதிலளிக்கபட்டது. எச்.ராஜா பதிலை தொடர்ந்து வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்க அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து தெரிவித்த பா.ஜ.க நிர்வாகி எச்.ராஜா மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pa ,J. Executive H. High Court ,Chennai ,J. Executive ,Chennai High Court ,Raja ,Tamil Nadu ,Senior Leader ,H. Raja ,Twitter ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பா.ஜ.க. மாநில...